புதுக்கோட்டை, டிச.3: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் அவர் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டைகளை வழங்கி முகாமை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது;-
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் புத்துணர்ச்சியுடன் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு மருத்துவ வல்லுநர் குழுவினர் நேரில் சென்று மருத்துவ முகாம்களை நடத்தி, பொதுமக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும்.
இம்முகாம் மூலம் மருத்துவ வசதிகள் சென்றடையாத இடங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவைகளை அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே நிறைவேற்றி வைப்பதாகும். இம்முகாம்களில் குழந்தைகள் நலன், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான முகாம் கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 14 அரசு மருத்துவமனைகளும், 10 தனியார் மருத்துவமனைகளும், 2 நோய் கண்டறியும் பரிசோதனை மையங்களும் செயல்படுகின்றன.
இத்திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறத்தக்க வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முதலமைச்சர் பதவியேற்ற நாளில் கொரோனா பெருந்தொற்றை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.4,000 வழங்கினார். இதன்மூலம் பொதுமக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பினர்.
‘மக்களைத்தேடி மருத்துவம்” திட்டம் மூலம் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் அவர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கப்படுகிறது. ‘இன்னுயிர் காப்போம்” நம்மை காக்கும் – 48 திட்டத்தின் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பற்றப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தப்படுவதுடன், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.25 கோடி மதிப்பில் 55 ஏக்கர் பரப்பளவில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
எனவே தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும், மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவிகளை பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பிரியா தேன்மொழி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நமச்சிவாயம், மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post இயற்கை ஆர்வலர்கள் முடிவு; ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் appeared first on Dinakaran.
