சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் வணிக வளாகத்துடன் பார்க்கிங் அமைக்க 10 இடங்கள் தேர்வு: இறுதி சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கிறது மாநகராட்சி

* சிறப்பு செய்தி
வணிக வளாகங்கள் கூடிய பார்க்கிங் வசதி அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய வணிக பகுதிகள், வணிக நிறுவனங்கள், சுற்றுலா பகுதிகள், பூங்காக்கள், தனியார் மால்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பார்க்கிங் பிரச்னைகள் என்பது காலம்காலமாக முடிவுக்கு வராமல் இருக்கின்றன. போதிய இடவசதி இல்லாததால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் வாகன ஓட்டிகள் மிகவும் தவிக்கின்றனர். இதனால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

இப்படி வாகனங்களை நிறுத்துவதால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவது சென்னையில் பல முக்கிய இடங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன.
எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோர போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்காக தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக் நகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5200 இடங்களில் சென்னை மாநகராட்சியால் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த பார்க்கிங் பிரச்னை நீடிக்கிறது. அரசு போக்குவரத்துத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் 3.13 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் அதிகபட்ச வாகனங்கள் சென்னையில் மட்டுமே இயங்குகின்றன. இதனால் சென்னை மாநகர சாலைகளில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வாகனங்களை எல்லாம் நிறுத்துவதற்குப் போதுமான இடவசதியும் கிடையாது.

பெரும்பாலும் தங்கள் வீடு, அலுவலகங்களுக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலையே உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் தான் சாலையோரங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. பார்க்கிங் கட்டணம் மூலம் தற்போது தினமும் ரூ.1.5 லட்சம் வரை மாநகராட்சிக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் மற்றும் மேம்படுத்த வேண்டிய வணிக வளாகம் என கூடுதலாக 10 இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதியை ஏற்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. இதில் கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டல அலுவலகங்கள், சி.பி.ராமசாமி சாலை வளாகம், தி.நகரில் உள்ள நாயர் சாலை வளாகம் உள்ளிட்டவையும் அடக்கம்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு தற்போது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானவை. இவை வணிக வளாகங்களுடன் கூடிய பார்க்கிங் வசதியாக அமைக்கப்படவுள்ளது. இது குறித்து திட்ட அறிக்கையை தயாரிக்க 2 நிறுவனங்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக பார்க்கிங் அமைக்க 15 மண்டலங்களை வடக்கு,தெற்கு என 2 பிரிவுகளாக பிரித்துள்ளோம். மண்டலம் 1-8 வரை ஒன்றும், மண்டலம் 9-15 வரை மற்றொன்று என்றும் பிரித்துள்ளோம்.

இதில் எந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதோ, அங்கு இடங்களை தேர்வு செய்து விரிவான ஆய்வை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பழுதடைந்துள்ள வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டு புதிதாக 3 முதல் 4 மாடிகளில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது தேர்வு செய்யப்பட்ட இடங்கள் ஆய்வு செய்யப்படும். அங்கு வணிக வளாகங்களுடன் கூடிய பார்க்கிங் வசதி அமைக்க இட வசதி உள்ளதா, சாலை இணைப்பு வசதி, பொதுமக்களுக்கான வசதி, போக்குவரத்து வசதி,பொருளாதார செயல்பாடு குறித்து ஆலோசகர்கள் விரிவான ஆய்வை மேற்கொள்கின்றனர்.வரைவு சாத்தியக்கூறுகள் ஆலோசகர்களால் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துகள்/பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இறுதி சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இவை இறுதி செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்காக அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

மாநகராட்சியால் பார்க்கிங் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்கள்
மண்டலம் பெயர் சாலை பெயர்
1 திருவொற்றியூர் பேரூராட்சி வணிகவளாகம் கட்டிடம் திருவொற்றியூர் உயர் சாலை
1 திருவொற்றியூர் நகராட்சி மருந்தக வளாகம் திருவொற்றியூர் உயர் சாலை
8 புல்லா அவென்யூ பழைய வளாகம் புல்லா அவென்யூ
8 ஈவிஆர் வளாகம் ஈகா தியேட்டருக்கு எதிரில் ஈவிஆர் சாலை
9 ஆர்.ஏ.புரம் வளாகம் சிபி ராமசாமி சாலை
9 சி.பி.ராமசாமி சாலை வளாகம் சி.பி. ராமசாமி சாலை
10 டாக்டர் நாயர் சாலை பழைய வளாகம் தியாகராயர் சாலை/டாக்டர் நாயர் சாலை
10 மாநகராட்சி அலுவலகம் என்.எஸ்.கே.சாலை
11 மாநகராட்சி அலுவலகம் ஆற்காடு சாலை
13 இந்திரா நகர் வணிக வளாகம் 3வது அவென்யூ சாலை

The post சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் வணிக வளாகத்துடன் பார்க்கிங் அமைக்க 10 இடங்கள் தேர்வு: இறுதி சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கிறது மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: