வில்லியனூர் அருகே பரபரப்பு கூட்டுக்கொள்ளை அடிக்க பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது கத்தி, மிளகாய் பொடி பறிமுதல்

வில்லியனூர், நவ. 25: வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையிலான போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிரைம் போலீசார் எழில்ராஜன், செந்தில்முருகன் உள்ளிட்டோர் கோபாலன்கடை பகுதியில் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோபாலன்கடை சுடுகாடு பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்ததை பார்த்த போலீசார், அவர்களை பிடித்து விசாரித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கத்தி, தடி, மிளகாய் பொடி போன்றவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது வாழப்பட்டாம்பாளையம் அப்பச்சி பிரகாஷ் (எ) ஜெயபிரகாஷ், முத்துப்பிள்ளைப்பாளையம் கலைக்குமார், கோகுல், அம்மா நகர் சுரேஷ், கோபாலன்கடை சதீஷ் என்பது தெரியவந்தது. பிறகு மேற்கொண்டு விசாரித்ததில் இவர்கள் அனைவரும் கூட்டுக்கொள்ளை அடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும், இவர்கள் மீது ஏற்கனவே அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. பிறகு அவர்களிடமிருந்து 2 கத்தி, தடி, மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 5பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

The post வில்லியனூர் அருகே பரபரப்பு கூட்டுக்கொள்ளை அடிக்க பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது கத்தி, மிளகாய் பொடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: