வாடிப்பட்டி அருகே அடுத்தடுத்த 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை

 

வாடிப்பட்டி, நவ. 24: வாடிப்பட்டி அருகே, அடுத்தடுத்து இரண்டு கோயில்களின் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டையில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவில் இந்த கோயிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், கொடிமரம் அருகே உள்ள உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

தொடர்ந்து சிவன் கருவறையை உடைத்த கொள்ளையர்கள், அங்கு ஏதேனும் விலையுயர்ந்த பொருட்கள் உள்ளனவா என தேடி பார்த்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இதேபோன்று நேற்று முன் தினம் நள்ளிரவில் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பெருமாள் நகர் நவநீத பெருமாள் கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்குள்ள உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீசார், இரு கோயில்களிலும் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் துறை நிபுணர்கள், கோயிலில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் துர்க்கையம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து 2 கோயில்களில் கொள்ளை நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

The post வாடிப்பட்டி அருகே அடுத்தடுத்த 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: