டெலிகிராமில் லிங்க் அனுப்பி வாலிபரிடம் ₹5.51 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் பார்ட் டைம் வேலை ஆசைக்காட்டி

வேலூர், நவ.16: வேலூர் அருகே டெலிகிராம் செயலி மூலம் பார்ட் டைம் வேலை ஆசைக்காட்டி வாலிபரிடம் ₹5.51 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த ஊசூர் பகுதியை சேர்ந்தவர் அமீன்(32), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 11ம் தேதி டெலிகிராம் செயலி மூலம் பார்ட் டைம் வேலை உள்ளதாக `லிங்க்’ வந்துள்ளது. இதனை நம்பிய அவர். அந்த `லிங்க்’கை பார்த்துள்ளார். அதில் சில `டாஸ்க்’ மூலம் வெற்றிபெற்றால் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் சிறு தொகையை முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய அமீன், சிறு தொகையை கடந்த 11, 12ம் தேதிகளில் முதலீடு செய்ய தொடங்கினார். குறிப்பாக ₹500 செலுத்தியதும் ₹1000 வந்தாகவும், ₹1,000 செலுத்தியதும் ₹2,000 கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையநம்பி அவர், அடுத்த பல தவணைகளாக மொத்தம் ₹5.51 லட்சத்தை முதலீடு செய்ததாக தெரிகிறது. அதிகளவு பணத்தை செலுத்திய நிலையில் பணம் திரும்ப கிடைக்கவில்லையாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அமீன், வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டெலிகிராமில் லிங்க் அனுப்பி வாலிபரிடம் ₹5.51 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் பார்ட் டைம் வேலை ஆசைக்காட்டி appeared first on Dinakaran.

Related Stories: