21 தமிழக மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் இருந்த ஒரு பகுதி மீனவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் இருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை, இலங்கை போலீசார் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று காலை ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி, 22 மீனவர்களில் முதல் முறையாக கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 பேரை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அக். 29ம் தேதி கைதான மீனவர்களில் கருப்பண்ணன் (எ) நம்பு முருகன் என்ற மீனவர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மீனவர் கருப்பண்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மீனவர் கருப்பண்ணன் மீண்டும் யாழ்ப்பாணம் சிறைக்கு இலங்கை போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். நேற்று விடுதலையான தமிழக மீனவர்கள் மற்றும் சில நாட்களுக்கு முன்பு தலைமன்னார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 38 மீனவர்கள் என 59 மீனவர்களும் ஒரு சில நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளனர்.

The post 21 தமிழக மீனவர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Related Stories: