சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்களர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம். தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம். அதாவது, 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 68 ஆயிரத்து 610 பேர், மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேர். இன்று முதல் டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம். அலுவலகம் செல்வோர் வசதிக்காக நவம்பர் 4 மற்றும் 5ம் தேதியும், நவம்பர் 18ம் தேதி மற்றும் நவம்பர் 19ம் தேதி என 4 நாட்கள் தமிழகத்தில் மொத்தமுள்ள 68,154 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 6 லட்சத்து 52 ஆயிரத்து 65 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 30 வாக்காளர்கள் உள்ளனர். வழக்கமாக இளைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்பு வசதி இருந்தது. தற்போது, 17 வயது முடிந்தவுடன் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என ஆண்டுக்கு 4 முறை 17 வயது முடிந்தவுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். அவர்களுக்கு 18 வயது முடிந்தவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உடனடியாக சேர்க்கப்படும். மேலும், www.voters.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘‘வாக்காளர் உதவி’’ கைபேசி செயலி (Voter Helpline Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் 4.23 கோடி பேர் (69.21 சதவீதம்) ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
2023 ஜனவரி 23ம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சம் பேர். இவர்களில் விவரம் சேகரிக்கப்பட்டு, சுமார் 9 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 9ம் தேதி முதல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் appeared first on Dinakaran.
