வந்தே பாரத் ரயிலுக்காக பலிக்கடாவாகும் வைகை எக்ஸ்பிரஸ்?.. புறப்படும் நேரம் மாற்றம்.. வேகம் குறைப்பு!!

சென்னை : வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயங்குவது போல காட்டுவதற்காக வைகை உள்ளிட்ட பல ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளாக மதுரை மக்களுக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலாக குறைந்த கட்டணத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 7.15 மணி நேர பயணத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. அதே போல, எதிர்திசையில், எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு 7.25 மணி நேர பயணத்தில் இரவு 9.15 மணிக்கு மதுரை சென்று அடைகிறது.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் வேகத்தை கையாள்வதற்காக நாளை முதல் வைகை எக்ஸ்பிரஸின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் நாளை முதல் காலை 6.40 மணிக்கே புறப்பட உள்ளது. அரை மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டாலும் வழக்கமான நேரமாகிய பிற்பகல் 2.25 மணிக்கு பதில் 2.10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். எதிர்திசையிலும் இது போலவே நேரமாற்றத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக மதுரையைச் சென்று அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் தனது 46வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், பயண நேரம் குறைக்கப்படும் என்று ரயில் பயணிகள் எதிர்ப்பார்த்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்காக பயணநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்காக இயல்பான கட்டணத்தில் இயக்கப்படும் வைகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதற்கு ரயில் பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post வந்தே பாரத் ரயிலுக்காக பலிக்கடாவாகும் வைகை எக்ஸ்பிரஸ்?.. புறப்படும் நேரம் மாற்றம்.. வேகம் குறைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: