வேலன்புதுக்குளத்தில் அக்.2ம் தேதி நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் அதிகாரிகள் உறுதியை ஏற்று அறிவிப்பு

சாத்தான்குளம், செப். 28: வேலன்புதுக்குளத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு அக்.2ம் தேதி நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று கிராம மக்கள் வாபஸ் பெற்றுள்ளனர். சாத்தான்குளம் யூனியன் நெடுங்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட வேலன்புதுக்குளத்தில் முறையாக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தியும், சாலை வசதி, பகுதிநேர ரேஷன் கடை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு வேலன்புதுக்குளம் பயணியர் நிழற்குடை முன்பு வரும் அக்.2ம் தேதி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தனர். இப்போராட்டம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை, சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரதிகலா தலைமையில் நடந்தது.

இதில் ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, ஒன்றிய உதவி பொறியாளர் கீதா, திருச்செந்தூர் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர், நெடுங்குளம் பஞ். தலைவர் சகாயஎல்பின், எஸ்ஐ சுரேஷ்குமார் மற்றும் வேலன்புதுககுளம் கிராம மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் திருச்செந்தூர் உபகோட்ட குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவு சார்பில் திறன்குறைந்த மோட்டாரை மாற்றி அமைத்தும், நெடுங்குளம் ஊரை சுற்றி வரும் கூட்டுக்குடிநீர் குழாயை மாற்றுவழி மூலம் விரைவில் தண்ணீர் கொண்டுவர 1 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பது, இதற்கு முன் ஒரு வார காலத்திற்குள் பஞ்சாயத்து மூலம் 1500 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து அதன் மூலம் ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வது, சாலை வசதி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைக்க நடவடிககை எடுப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று கிராம மக்கள், அக்.2ம் தேதி அறிவித்திருந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

The post வேலன்புதுக்குளத்தில் அக்.2ம் தேதி நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் அதிகாரிகள் உறுதியை ஏற்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: