அமைச்சர் உதயநிதி கிருஷ்ணகிரி வருகை

கிருஷ்ணகிரி, செப்.25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்றிரவு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு அரங்க மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (25ம்தேதி) நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இன்று காலை 8.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படுகிறார்.

 

காலை 8.50 மணிக்கு சென்னப்பள்ளியில் உள்ள அக்ரோ புராசிங் சென்டரில் ₹26 கோடியே 81 லட்சம் மதிப்பில் நடைபெறும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார். காலை 9.20 மணிக்கு சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளியில் சிப்காட் மொபிலிட்டி பார்க் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்கிறார். காலை 10 மணிக்கு குந்தாரப்பள்ளியில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் 500 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கையேடுகளை வழங்குகிறார்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். அங்கு தரைதளத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். காலை 11.15 மணிக்கு கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடுகிறார். காலை 11.30 மணிக்கு 2வது தளத்தில் உள்ள கூட்ட அரங்சில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து அனைத்து துறைகள் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலை 3.45 மணிக்கு கிருஷ்ணகிரி நகரில் பெங்களூர் சாலையில் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் அருகில் டாக்டர் கலைஞர் நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  தேவராஜ் மஹாலில் நடைபெறும் மூத்த முன்னோடி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று கார் மூலம் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வந்த அமைச்சர், கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர் விடுதிக்கு சென்ற அவர், மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், விடுதியில் வழங்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், காட்டிநாயனப்பள்ளி அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்ற அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். அத்துடன் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரசு வழங்கும் சலுகைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் சரயு, எம்எல்ஏக்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post அமைச்சர் உதயநிதி கிருஷ்ணகிரி வருகை appeared first on Dinakaran.

Related Stories: