புரட்டாசி மாதம் என்பதால் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு

 

கடலூர், செப். 25: புரட்டாசி மாதம் என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து மற்றும் விலை குறைந்து காணப்பட்டது. கடலூரில் சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடலூர் துறைமுகம் மீன்பிடி தளத்தில் அதிகாலை 3 மணி முதலே மீன் விற்பனை தொடங்கி விடும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக மீன்களின் விலையும் உயர்ந்து காணப்படும்.

இந்நிலையில் புரட்டாசி மாத ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும் வரத்து குறைவால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. பொதுவாக ரூ.400 முதல் ரூ.500 விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன், கிலோ ரூ.250க்கும், ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150க்கும், ரூ.800 வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளிலும் வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது.

The post புரட்டாசி மாதம் என்பதால் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு appeared first on Dinakaran.

Related Stories: