உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணியில் சதாப் கானுக்கு கல்தா? ஷாகின் ஷா அப்ரிடி துணை கேப்டனாகிறார்

லாகூர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அணியின் முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளதால் அணியை அறிவிப்பதில் தாமதமாகி உள்ளது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், துணை கேப்டனும், ஆல்ரவுண்டருமான சதாப் கான் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இதனால் அவரிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அணியில் இடம் கிடைப்பது சிக்கல் தான். அவருக்கு பதிலாக 24 வயதான லெக் ஸ்பின்னர் அப்ரார் அகமது சேர்க்கப்பட உள்ளார். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 போட்டியில் 38 விக்கெட் எடுத்து அவர் கவனம் ஈர்த்தார்.

இதேபோல் தொடக்க வீரர் பகர் ஜமானின் இடமும் சந்தேகத்திற்கிடமாக உள்ளது. காயம் காரணமாக நசீம்ஷாவுக்கு பதிலாக ஹசன்அலி அல்லது ஜமான்கான் இடம்பெறக்கூடும். வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ரவூப் உலக கோப்பைக்கு முன்உடற்தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை கேப்டன் சதாப் கான் நீக்கப்படும் பட்சத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஷகின்ஷா அப்ரிடி அந்த பதவியில் நியமிக்கப்படுவார். அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவர் இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் விரைவில் பிசிபி தலைவர் ஜகா அஷ்ரப்பை சந்திக்க உள்ளனர். அதன்பின்னர் அணி அறிவிக்கப்பட உள்ளது.

The post உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணியில் சதாப் கானுக்கு கல்தா? ஷாகின் ஷா அப்ரிடி துணை கேப்டனாகிறார் appeared first on Dinakaran.

Related Stories: