பள்ளி மாணவர்களுக்கு பசுமைப்படை சீருடை

கடத்தூர், செப்.15: கடத்தூர் அருகே நத்தமேட்டில் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கு, சீருடை வழங்கும் விழா நடந்தது. விழாவில் தலைமை ஆசிரியர் கோவிந்தராசு தலைமை வகித்தார். எதிர்கால காலநிலை மாற்றம் குறித்தும், பசுமை குறித்தும் விரிவாக பேசினார். மேலும் தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு கலந்துகொண்டு, பள்ளியை பார்வையிட்டு, பள்ளியில் உள்ள பசுமை சார்ந்துள்ள மூலிகை தோட்டம் மற்றும் நர்சரி தோட்டம், கீரை தோட்டம் போன்றவைகளை பார்வையிட்டு பாராட்டி பேசினார். சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றியும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பற்றிய விழிப்புணர்வு குறித்தும் மாணவர்களிடையே உரையாற்றினார்.

பள்ளியின் தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தமலை, 2023-24ம் ஆண்டுக்கான பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கினார். விழாவில், பசுமை படை மாணவர்களுக்கு, பசுமை படை சீருடை வழங்கப்பட்டது. விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு பசுமைப்படை சீருடை appeared first on Dinakaran.

Related Stories: