இக்கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள், அமைப்பினர் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விசர்ஜனத்தின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 15 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முத்துண்ணன் குளம், பவானி ஆறு (சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோயில், தேக்கம்பட்டி), அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை முக்கோணம் ஆறு, சிறுமுகை பழத்தோட்டம், சாடிவயல், வாளையார் அணை, ஆழியாறு ஆத்துப்பாறை, குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளம், வெள்ளக்கிணறு குளம் ஆகிய இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
விநாயகர் சிலைகள் கரைக்க கட்டுப்பாடுகள் விதிப்பு: நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்த விநாயகர் நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம்.
சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்று சுழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post கோவை மாவட்டத்தில் 15 நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு appeared first on Dinakaran.
