1,000 -வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நாளை நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

சென்னை:1,000 -வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நாளை நடைபெறுகிறது. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, குடமுழுக்குகள் நடைபெறாத திருக்கோயில்களை கண்டறிந்து குடமுழுக்குகளையும் முழுவீச்சில் நடத்தி வருகிறது. அந்த வகையில், 1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா நாளை (10.09.2023) காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

1,000-வது குடமுழுக்கு பெருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கௌமார மடம், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவநெறிச் செம்மல் கே.பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், பழநி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நாளை அதிகாலை 5 மணிக்கு நாலாவது கால யாகசாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து, அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெறுகிறது. காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் இராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டும் நடைபெறும். பின்னர் அனைத்து பரிவாரங்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நன்னீராட்டும், சிறப்பு திருமஞ்சனம், எழில்கோலம் மற்றும் பேரொளி வழிபாடும் நடைபெறும். மாலை 4 மணிக்கு திருமணக்காட்சி மற்றும் வீதிவுலா நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

The post 1,000 -வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நாளை நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: