ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை-வங்கதேசம் நாளை பலப்பரீட்சை

கொழும்பு: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. லாகூரில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில் 2 நாள் ஓய்வுக்கு பின் சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டி நாளை கொழும்பில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ஷனகா தலைமையில் இலங்கை அணியில், பேட்டிங்கில் குசால் பெரேரா, அசலென்கா மட்டுமே பார்மில் உள்ளனர். பவுலிங்கில் தீக்சனா, பதீரனா, ரஜிதா சிறப்பாக செயல்படுகின்றனர். மறுபுறம் வங்கதேச அணி முதல் போட்டியில் தோற்ற நிலையில் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்தால் பைனல் வாய்ப்பு மங்கிவிடும் என்பதால் கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்குகிறது. லீக் சுற்றில் இலங்கையிடம் படுதோல்வி அடைந்ததால் அதற்கு பழிதீர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதனிடையே கொழும்பில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நாளையும் 90 சதவீதம் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை போட்டி மழையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதற்கு முன் 52 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 41ல் இலங்கை, 9ல் வங்கதேசம் வென்றுள்ளன. 2 போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.
இந்தியா-பாக். போட்டியும் ரத்தாகலாம்? ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் நாளை மறுநாள் (ஞாயிறு) கொழும்பில் நடக்கும் 3வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் கொழும்பில் அன்று 95 சதவீதம் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய போட்டியும் ரத்தாகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பல்லெகலேவில் கடந்த 2ம் தேதி இரு அணிகளும் மோதிய போட்டி ரத்தான நிலையில் இந்த போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே கொழும்பில் நேற்று கனமழை பெய்ததால் இந்திய வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் உள் அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

The post ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை-வங்கதேசம் நாளை பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: