சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ம் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.

இதனையடுத்து, எந்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டுமென உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ்பாபு ஆகியோர், வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஆவணங்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கு எம்.பி., எம் எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிபதி எஸ்.அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அருண் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி, மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் பரணிகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வரும் திங்கள் கிழமை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: