வடமதுரை அருகே மின் மோட்டாரின் வயர் திருட்டு

வடமதுரை: வடமதுரை அருகே விவசாய தோட்டத்தில் மின் மோட்டாரின் வயர் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வடமதுரை அருகே பிலாத்து ஊராட்சியில் உள்ள சித்துவார்பட்டி – மோர்பட்டி சாலையில் தலைவெட்டி குளம் என்ற பகுதியில் வசிப்பவர் சண்முகம் (74 ). முன்னாள் பிலாத்து ஊராட்சி மன்ற தலைவரான இவர், அவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்குள்ள கிணறு அருகே உள்ள போர்வெல் மோட்டார் பழுதாகி விட்டதால் அதனை ரிப்பேர் செய்வதற்காக கொடுத்துவிட்டு போர்வெலில் இருந்த சுமார் 300 மீட்டர் மின்சார காப்பர் வயர்களை எடுத்து கிணற்றின்அருகே வைத்திருந்தார்.

வழக்கம்போல் நேற்று காலை விவசாய பணிகளுக்காக அங்கு வந்தபோது, கிணற்று மேட்டில் இருந்த காப்பர் வயர்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வடமதுரை காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன் வடமதுரை பகுதிகளில் பல்வேறு ஊர்களில் உள்ள விவசாய கிணறுகளில் உள்ள மின்மோட்டார் வயர்கள் மற்றும் விவசாய உழவு பணிகளுக்காக தோட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டிராக்டர்களின் பேட்டரிகள் காணாமல் போனது. இதுபோன்ற திருட்டுக்கள் தொடர்ந்து நடப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

The post வடமதுரை அருகே மின் மோட்டாரின் வயர் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: