கார்பன் மாசு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்துக்கு ‘ஏர்போர்ட் கார்பன் அங்கீகாரம்’: விமான நிலைய கவுன்சில் வழங்கியது

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு தேவையான 100 சதவீத மின்சாரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக பயன்படுத்தப்படுவதால், கார்பன் மாசு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச விமான நிலைய கவுன்சில், ‘ஏர்போர்ட் கார்பன் அங்கீகாரம்’ என்ற சான்றிதழை வழங்கி உள்ளது. சென்னை விமான நிலையத்தை இயக்குவதற்கு ஒவ்வொரு மாதமும் 63.92 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்சாரம் முழுவதும் கடந்த மே மாதம் முதல், பசுமை எரிசக்தியாக, சோலார் மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மின்சாரத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படும் அளவு மிகவும் குறைவாக இருக்கும். சென்னை விமான நிலையத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தில் 59 சதவீத மின்சாரம் வெளி நிறுவனங்களிடம் இருந்து சூரிய ஒளி மின்சக்தியாக வாங்கப்படுகிறது. அதோடு சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி அலகு மூலம், 3 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது. இதுதவிர தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து பசுமை மின்கட்டண திட்டத்தின் கீழ் 38 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாங்கப்படுகிறது. இதேப்போல் சென்னை விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் நூறு சதவீத மின்சாரமும், கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தியாக பயன்படுத்தப்படுகிறது.

சென்னை விமான நிலைய முனையங்கள் முழுதும் 100 சதவீதம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு தேவையான 100 சதவீத மின்சாரமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் கார்பன் மாசு என்பது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச விமான நிலைய கவுன்சில், ஏ.சி.ஏ எனப்படும் ‘ஏர்போர்ட் கார்பன் அங்கீகாரம்’ என்ற சான்றிதழை வழங்கி உள்ளது. மேலும், பசுமை எரிசக்தி பயன்படுவதன் காரணமாக எரிசக்தி மேலாண்மை அமைப்பின் கீழ் ஐ.எஸ்.ஓ. 50001-2018 சான்றிதழும் சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கார்பன் மாசு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்துக்கு ‘ஏர்போர்ட் கார்பன் அங்கீகாரம்’: விமான நிலைய கவுன்சில் வழங்கியது appeared first on Dinakaran.

Related Stories: