சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவிற்கு, கூடுதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மலேசியாவிற்கு இதுவரை, தினமும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் 2, ஏர் ஏசியா விமானங்கள் 2, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 1, என 5 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 5 விமானங்கள் தினமும் சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கும், கோலாலம்பூரில் இருந்து சென்னைக்குமாக 10 விமான சேவைகளாக இயக்கப்பட்டு வருகின்றன. மலேசியா சிறந்த சுற்றுலா தளமாக இருப்பதாலும், மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் இருப்பதாலும், சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
ஆனால் தினமும் 5 விமானங்கள் மட்டுமே, மலேசிய செல்வதால், பயணிகளுக்கு, விமானங்களில் அவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைப்பதில்லை. இந்நிலையில் சென்னை-கோலாலம்பூர்-சென்னை இடையே தினசரி விமான சேவையை புதிதாக, பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் தொடங்கியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தினமும் மாலை புறப்படும் இந்த விமானம், இரவு 10:25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறது. அதன்பின்பு இந்த விமானம் மீண்டும் இரவு, 11:15 மணிக்கு சென்னையில் இருந்து, மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு செல்கிறது.
இந்த புதிய விமான சேவை கடந்த வியாழன் முதல் தொடங்கியுள்ளது. இது போயிங் ரக விமானம் என்பதால், 189 பயணிகள் வரை, ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.சென்னை- கோலாலம்பூர்- சென்னை இடையே, கூடுதலாக மேலும் ஒரு விமானம், 2 புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது, விமான பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னை-கோலாலம்பூர் இடையே கூடுதல் விமான சேவை : பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.
