அரிமளம் அருகே கருப்பர் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

திருமயம்,ஆக.15: அரிமளம் அருகே நடைபெற்ற கருப்பர் கோயில் ஆடி மாத பூஜையில் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் பெரிய கருப்பர், சின்ன கருப்பர், சங்கிலி கருப்பர், சோனைய கருப்பர், காளியம்மாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆடி மாத விழா நேற்று முன்தினம் இரவு ஆடு, கோழி பலியிடுதலுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் சாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்கள் சாமி அழைப்பு நிகழ்ச்சியில் குறி கேட்டனர். இதனைத் தொடர்ந்து கருப்பருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகம் அருகே பக்தர்களுக்கு அருட் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் புலிவலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post அரிமளம் அருகே கருப்பர் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: