அமைச்சர் மீதான லஞ்ச புகார் சிஐடி விசாரணைக்கு உத்தரவு: முதல்வர் சித்தராமையா அதிரடி

பெங்களூரு: கர்நாடகா வேளாண் துறை அமைச்சர் என்.செலுவராயசாமி பணியிட மாற்றங்களுக்கு லஞ்சம் கேட்பதாக மண்டியா மாவட்ட வேளாண் துறை உதவி இயக்குநர்கள், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர். வேளாண் துறை அதிகாரிகள் ஆளுநரிடம் கொடுத்த புகார் கடிதத்தில், பணியிட மாற்றங்களுக்கு தலா ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அமைச்சர் செலுவராயசாமி லஞ்சம் கேட்கிறார். இந்த லஞ்சத்தொகையை பெற்றுத்தருமாறு வேளாண் துறை இணை இயக்குநர் மூலம் அமைச்சர் அழுத்தம் தருகிறார்.

லஞ்சம் கேட்டு அமைச்சர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் கடிதத்தை மாநிலத்தின் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவுக்கு அனுப்பிய ஆளுநர் தாவர்சந்த் கெலாட், இந்த விவகாரத்தை விசாரித்து சரியான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அமைச்சர் செலுவராயசாமி மீதான புகார் கடித விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்ப, வேளாண் துறை அதிகாரிகள் அளித்ததாக கூறப்படும் புகார் கடிதம், ஒரு பொய் கடிதம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார், இது எதிர்க்கட்சிகளான பாஜ மற்றும் மஜதவின் சதி என்று குற்றம்சாட்டினார். இருந்தாலும் அமைச்சர் செலுவராயசாமி மீதான புகார்களை விசாரித்து அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதுதான் நல்லது என்று முடிவெடுத்த முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரத்தில் சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post அமைச்சர் மீதான லஞ்ச புகார் சிஐடி விசாரணைக்கு உத்தரவு: முதல்வர் சித்தராமையா அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: