அந்த வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இந்த பாலம் முழுவதும் இரும்பால் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இரும்புப் பாலம் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தின் 2வது முழு இரும்பு பாலம் தற்போது வர்த்தக பகுதியான தி.நகரில் அமைகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் : இந்த பாலம் ரூ.129.64 கோடியில் அமைகிறது. தற்போது பல பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்துக்கு 53 பில்லர்கள் 8.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் அளவில் அமைக்க உள்ளது.
தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமையும். இந்த மேம்பாலம் அமைத்தால் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். புதிய மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில், 8.40 மீட்டர் அகலத்தில் ரூ.131 கோடி செலவில் அமைகிறது. வாகனங்கள் பாலத்தின் மீது சென்றால் அதிர்வை தாங்கும் வகையில் புதிய தொழில் நுட்பம் இருக்கும். கூடுதல் பாதுகாப்பிற்காக பரிந்துரைக்கப்பட்ட எடையை விட 2.5 மடங்கு அதிக எடையில் தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பாலத்தின் சாய்தளத்தை இணைக்கப்படும் பகுதியில் மேம்பாலத்திலிருந்து வெளியேறுவதற்கும், நுழைவதற்கும் ஏற்றவாறு பாலம் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் சிமென்ட் கான்கிரிட் கொண்டு தான் அமைக்கப்படும். ஆனால் முதல் முறையாக இரும்பு தூண்கள் கொண்டு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இரும்பு தூண்களுக்கு மேல் சிமென்ட் கான்கிரிட் கலவை வைக்கப்பட உள்ளது. தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரிட் கொண்டு அமைக்கப்படுகிறது. தூண் மற்றும் பாலத்தை தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பால் அமைக்கப்படுகிறது.
சேலம் இரும்பு ஆலையில் இந்த தூண் போன்ற வடிவமைப்பை உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இரும்பு தூணானது 50 ஆண்டுகள் ஆயுட் காலம் உடையது. இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி நடைபெறும். பாலத்தின் மேல் பகுதி வழக்கம் போல் சிமெண்ட் கான்கிரிட் கொண்டு மேற்கொள்ளப்படும். 24 மாதங்களில் பணியை முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் முடிக்கப்படும். அதன்படி 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சென்னையில் இரும்பு தூணால் அமைக்கப்படும் முதல் மேம்பாலம் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்தில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 2வது பிரமாண்ட இரும்பு மேம்பாலம்: வியாபார தலைநகரான தி.நகரில் பணி மும்முரம் appeared first on Dinakaran.