குடவோலை முறை கல்வெட்டு கோயிலில் கவர்னர் குடும்பத்துடன் தரிசனம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் குடவோலை முறை கல்வெட்டு கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி, அரவது குடும்பத்துடன் வருகை தந்து தரிசனம் செய்தார். உத்திரமேரூர் பஜார் வீதியில் பிரசித்திபெற்ற வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் முதலாம் பராந்தக சோழர்கள் ஆட்சி காலத்தில் கி.பி.920ம் ஆண்டில் குடவோலை தேர்தல் முறை குறித்து கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கோயில் குடவோலை முறை கோயில் என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு சிறப்பு மிக்க கோயிலில் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் நேரில் வந்து கல்வெட்டுகளை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து, காவலர் அணிவகுப்பு மரியாதை கவர்னர் ஏற்றுக்கொண்டார். பின்னர், கோயில் அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி கல்வெட்டுகளை பார்வையிட்டார். அப்போது, தொல்லியல் துறை அலுவலர்கள், கோயில் உள்ள கல்வெட்டுகள் குறித்து கவர்னரிடம் விளக்கமளித்தனர். பின்னர், கவர்னர் குடும்பத்துடன் வைகுண்ட பெருமாளை தரிசனம் செய்தார்.

The post குடவோலை முறை கல்வெட்டு கோயிலில் கவர்னர் குடும்பத்துடன் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: