அம்பத்தூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய இருவர் கைது

 

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர்-ஒரகடம் அண்ணா நெடுஞ்சாலையில் பவானி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் நிர்வாகியான அம்பத்தூர் அடுத்த புதூர் பானுநகரைச் சேர்ந்த பூபாலன்(53) கடந்த 6ம் தேதி இரவு வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து கோயிலை திறந்து பார்த்தபோது கோயில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க தாலி மற்றும் உண்டியலில் இருந்த ரூ.1000 திருடு போனதாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் பூபாலன் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து அம்பத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் அலமேலு வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். விசாரணையின் அடிப்படையில் நேற்று ஒரகடம் அன்பழகன் தெருவை சேர்ந்த பொன்னுக்குமார்(26) மற்றும் ஒரகடம் அண்ணா நெடுஞ்சாலையைச் சேர்ந்த முனுசாமி(31) ஆகியோரை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், கோயில் உண்டியலை உடைத்து திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களை கைது செய்த போலீசார், அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அம்பத்தூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: