நெல்லையில் அஞ்சலகங்களில் நாளை முதல் தங்க பத்திர விற்பனை

தென்காசி, ஜூன் 18: நெல்லையில் அஞ்சலகங்கள் மூலம் தங்க பத்திர விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. நெல்லை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு தங்க பத்திரத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திர விற்பனை அஞ்சலகங்கள் மூலமாக நாளை (19ம்தேதி) முதல் 23ம்தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.5926ஆகும். நெல்லை கோட்டத்தில் நெல்லை, பாளை, அம்பை தலைமை தபால் நிலையங்களிலும், அனைத்து துணை தபால் நிலையங்களிலும் தங்கப் பத்திர விற்பனை நடக்கிறது.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தனிநபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும்போது, தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல் ஆகியவற்றை கொடுத்து தங்க பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லையில் அஞ்சலகங்களில் நாளை முதல் தங்க பத்திர விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: