நாங்கள் செய்த தவறையே இந்தியாவும் செய்துவிட்டது; 5 சதம் அடித்த அஸ்வினை சேர்க்காதது விசித்திரமானது: ஆஸி. மாஜி வீரர் ஸ்டீவ் வாக் பேட்டி

லண்டன்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாள் ஆடுகளத்தின் மேற்பகுதியில் அதிக புற்கள் பச்சையாக காணப்பட்டதாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால், வெயில் நன்றாக அடித்ததால் ஆடுகளம் காய்ந்து பவுன்ஸ், சுழற்பந்து வீச்சுக்கு உதவும் வகையில் மாறி உள்ளது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 296 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா உள்ளது. இன்று 4வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆஸி. அணியின் முன்னாள் முன்னணி வீரர் ஸ்டீவ் வாக் கூறியதாவது:- இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததுபோன்று நாங்களும் 2019-ல் தவறு செய்தோம். 2019-ல் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் ஆஷஸ் தொடரில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இங்கிலாந்திடம் 145 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். ஓவல் எப்போதுமே ஒரு தந்திரமான ஆடுகளம். மேற்பகுதி பச்சையாக இருப்பதுபோல் தோன்றும், ஆனால் அடியில் சற்று காய்ந்த நிலையில், உடையும் நிலையில் இருக்கும். பச்சை ஆடுகளம், சீதோஷ்ண நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு பந்துவீச்சில் சாதித்து விடலாம் என இருக்கலாம்.

ஆனால், சூரியன் வெளியே வந்தபின் ஒட்டுமொத்தமாக ஆடுகளத்தின் தன்மை மாறிவிடும். மேலும், இந்தியா தவறான அணியை தேர்வு செய்ததாக நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு ஏற்றத்தாழ்வுடன் முக்கிய பங்கு வகிக்கும். நானாக இருந்தால் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அஸ்வினை தேர்வு செய்திருப்பேன். அவர் டெஸ்டில் 5 சதங்கள் அடித்துள்ள நிலையில், அவர் பேட்டிங் செய்யமாட்டார் என என்னால் நம்ப முடியாது. இந்த முடிவு விசித்திரமானதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

ரகானே ஆட்டம் நுட்பமாக உள்ளது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 3-வது நாளில் அணியை மீட்க அஜிங்க்யா ரஹானே மீது ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பிக்கை வைத்திருந்தது. அவரும் சூப்பராக ஆடி 89 ரன்கள் குவித்தார். இதற்கிடையில் தென் ஆப்ரிக்க அணியின் மானுஜி வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் ரகானே தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் “ரகானே இவ்வளவு சிறப்பாக ஆடிப் பார்த்ததில்லை. அவரது தாமதமாக விளையாடும் நுட்பம் மிகவும் நன்றாக உள்ளது” என்று கூறி உள்ளார்.

The post நாங்கள் செய்த தவறையே இந்தியாவும் செய்துவிட்டது; 5 சதம் அடித்த அஸ்வினை சேர்க்காதது விசித்திரமானது: ஆஸி. மாஜி வீரர் ஸ்டீவ் வாக் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: