களக்காடு அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்

களக்காடு, ஜூன் 8: களக்காடு அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தனது குழந்தையுடன் மாயமானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு அருகே சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பானுபிரியாவிற்கும் (23), ஏமன்குளத்தை சேர்ந்த தங்கராஜிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து பானுபிரியா கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 31ம்தேதி பானுபிரியா தனது குழந்தை, தாயார் சமுத்திரகனியுடன் களக்காட்டிற்கு வந்தார். பின்னர் தாயாரிடம் பேன்சி பொருட்கள் வாங்கி வருவதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார். அதன்பின் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சமுத்திரகனி பல்வேறு இடங்களில் தேடியும் பானுபிரியா மற்றும் குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பானுபிரியாவை தேடி வருகின்றனர்.

The post களக்காடு அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: