கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வடசென்னையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்; கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வடசென்னை புளியந்தோப்பில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம்.

அதே போல் திமுக முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இது கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆகும். இதனால், நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் பிறந்தநாள் சமயத்தில் ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அன்றைய தினம் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கலைஞரின் பிறந்தநாள் அன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அன்றைய தினம் மாலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடக்க இருந்தது.

இந்த பொதுக்கூட்டம் ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 7ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. அதன்படி இன்று மாலை 6.00 மணியளவில் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விழா பேரூரையாற்ற உள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், பேராசிரியர் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு செய்துள்ளார். சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமாக ராஜா தர்பார் போல மேடை அமைக்கப்பட்டுள்ளது. மலையில் உதயசூரியன் உதிப்பது போலவும் அதில், ஒரு பக்கம் கலைஞர் மற்றொரு பக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவது போலவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் வாழை மரங்கள், 100 அடியில் பிரமாண்ட கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

The post கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வடசென்னையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்; கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: