அவில்தார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி

தஞ்சாவூர்: தினகரன் செய்தி எதிரொலியாக தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே அவில்தார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருச்சி – நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சாலைகள் முழுமையாக அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அம்மாப்பேட்டை அருகே அவில்தார்சத்திரம் என்ற பகுதியில் புதிய சாலை- பழைய சாலையுடன் இணைக்கப்பட்டு மூன்று வழிப்பாதையாக உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரும்பு தடுப்பு வேலி பொறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாளடைவில் அந்த தடுப்பு வேலி சிதலமடைந்தது. எனவே அந்த இடத்தில் தடுப்பு வேலி இல்லாததால் வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்தனர். அதேபோல் அப்பகுதியில் மின் விளக்குகளும் இல்லாததால் வாகன விபத்துக்கள் தொடர்கதையாக நடந்து வந்தது. எனவே அந்த பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் அங்கு சாலை முழுமையாக முடிக்கப்படாத நிலையில் குடிமகன் அங்கு மது அருந்தி திறந்த வெளி பார் போல் மாற்றி வருகின்றனர். எனவே இரவு நேரங்களில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினகரனில் வெளியானது. இதையடுத்து அப்பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செய்தி வெளியிட்ட தினகரன் நிர்வாகத்தினருக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post அவில்தார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி appeared first on Dinakaran.

Related Stories: