விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட வாசப்பெருமாள் கோயில் தேரோட்டம்

விழுப்புரம், ஜூன் 4: விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலையில் திருப்பல்லக்கு உற்சவத்திலும், இரவில் அம்சவாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனங்களில் வைகுண்டவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7 மணியளவில் திருத்தேர் மகோற்சவம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வைகுண்டவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலையில் திருமஞ்சனம், தீர்த்தவாரி, அவரோஹனம், கடப்ரோக்‌ஷணம், சாற்று முறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

The post விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட வாசப்பெருமாள் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: