டோக்கியோ, சிங்கப்பூரில் இருந்து சென்னை, மதுரைக்கு நேரடி விமான சேவை வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: டோக்கியோ -சென்னை, சிங்கப்பூர்-மதுரைக்கு நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்த உத்தேசித்து உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தொழில் முதலீட்டாளர்களை அழைப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வெற்றிகரமாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். தனது பயணத்தின் போது, அரசு மற்றும் தொழில் நிறுவனங்களை சார்ந்த தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களை, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களைச் சந்தித்தேன்.

தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளது. ஜப்பான்-இந்தியா முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டாண்மைத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரங்களில், மூன்று தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், கடந்த இருபதாண்டுகளில் ஜப்பான் நாட்டினரின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது. ஜப்பானில் கணிசமான புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளனர். தகவல் தொழில்நுட்பம், நிதி தொடர்பான துறைகளில் அவர்கள் வல்லுநர்களாக உள்ளனர். தமிழகத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார, கலாசார உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

தற்போது சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது, கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப்பட்டது. நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகியுள்ளது. சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.

2024, ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு நடத்தவுள்ள நிலையில், ஜப்பானில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்த்திட ஏதுவாக, நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர்.

சிங்கப்பூருக்கும் சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும் சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே விமான சேவை உள்ளது. எனவே, சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையில் அதிக விமானங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சாதகமாக பரிசீலித்திட ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான இணைப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சிங்கப்பூர்-மதுரை இடையே விமானங்களின் எண்ணிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தினசரி விமானமாக அதிகரிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை தான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post டோக்கியோ, சிங்கப்பூரில் இருந்து சென்னை, மதுரைக்கு நேரடி விமான சேவை வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: