கைது நடவடிக்கையில் விதிமீறல் ஆதாரம் இருந்தால் மேல்முறையீட்டில்தான் நிவாரணம் பெற முடியும்: உயர் நீதிமன்றம் விளக்கம்

சென்னை: விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.கணேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் சங்கர்நகரில் மரக்கடை நடத்தி வருகிறேன். கடந்த 2011 செப்டம்பர் 9ம் தேதி மதியம் எனது வீட்டுக்கு சங்கர்நகர் க்யூ பிராஞ்ச் போலீசார் வந்து வீட்டில் இருந்த ஒரு டார்ச் லைட்டை எடுத்ததுடன் என்னையும் அழைத்து சென்றனர். அப்போது எனது நண்பர் சேசு ராஜாவை கைது செய்த விவரம் தெரியவந்தது. போலீஸ் நிலையம் கூட்டி சென்ற பிறகு என்னை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று இறுதியில் நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவில் அடைத்து வைத்து அடித்து மிரட்டினர்.

விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்திற்கு என்னை பொறுப்பேற்குமாறு அடித்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எனது மகள் உயர் அதிகாரிகளுக்கு தந்தி மூலம் தகவல் கொடுத்தார். தந்தியை வாங்கிய அதிகாரிகள், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில் தொடர்பு படுத்த போலீசார் முயற்சி செய்தார்கள். என்னை கைது செய்த விஷயத்தை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை. சட்டவிரோதமாக என்னை கைது செய்தனர். எனவே, என்னை சட்டவிரோதமாக கைது செய்து துன்புறுத்திய க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சங்கர் நகர் இன்ஸ்பெக்டர் எஸ்.ஏ.சீனிவாசன் ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். க்யூ பிராஞ்ச் போலீசில் நிலுவையில் உள்ள வழக்கை சிபிஐ விசாரணைக்கு கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி விசாரித்ததார், அப்போது அரசு தரப்பில், 5 நாள் சட்ட விரோதமாக அடைத்து வைத்ததாக மனுதாரர் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று வாதிடப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் ஆவணங்கள்தான் முக்கியம். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார் என்பதை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீடு வழக்கில்தான் நிரூபிக்க வேண்டும். இந்த நிலையில் ரிட் மனு மூலம் எந்த நிவாரணமும் பெற முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

The post கைது நடவடிக்கையில் விதிமீறல் ஆதாரம் இருந்தால் மேல்முறையீட்டில்தான் நிவாரணம் பெற முடியும்: உயர் நீதிமன்றம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: