ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்: 616 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்

ஆலங்குடி, மே 26: ஆலங்குடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 616 காளைகள் சீறிப்பாய்ந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேவுகம்பட்டி காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன் ஜல்லிக்கட்டுக்கான உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து போட்டியினை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா கொடியசைத்து காலை 8.30க்கு தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டிற்காக மதுரை, சிவகங்கை, பரமக்குடி, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 616 காளைகள் பங்கேற்றன. 125 மாடுபடி வீரர்கள் 5 சுற்றுகளாக களமிறங்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கும் ரொக்க பரிசு, வெள்ளி காசுகள், சைக்கிள், மின்விசிறி, எவர் சில்வர் பாத்திரங்கள், ஹெல்மெட் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள், அண்டா என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது.

மாலை 2 மணிக்கு போட்டி நிறைவு பெற்ற நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுபிடி வீரர்கள் 10 பேர், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் பதுகாப்பிற்காக புதுக்கோட்டை டிஎஸ்பி செல்வம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் என அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே களத்தில் இறங்கி அனுமதிக்கப்பட்டனர்.

The post ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்: 616 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: