திருவிடந்தை பொன்னியம்மன் கோயில் நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு ஒதுக்க தடை கோரி வழக்கு: ெசங்கை கலெக்டர் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

மாமல்லபுரம், மே 18: திருவிடந்தை பொன்னியம்மன் கோயில் நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்க தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆண்டிரத்தினம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் நித்ய கல்யாண பெருமாள் கோயில், பொன்னியம்மன் கோயில், கங்கையம்மன் கோயில் உட்பட ஐந்து கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கோயில் பூஜைகள் உள்ளிட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நித்ய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கோயில் நிலம் என வகைப்படுத்தி, பட்டா வழங்கப்பட்டுள்ளது. பொன்னியம்மன் கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை தவறாக அனாதீனம் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொன்னியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அனாதீனம் நிலம் என்று தவறாக வகைப்படுத்தியதை மாற்றி, பட்டா வழங்க கோரி அரசுக்கு மனு அளித்துள்ளோம். ஆனால், திடீரென இந்த நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்குவது தொடர்பாக திருப்போரூர் தாசில்தார் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கோயில் நிலத்தை மூன்றாம் நபருக்கு ஒதுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், இந்த மனுவுக்கு ஜூன் 13ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி செங்கல்பட்டு கலெக்டர், திருப்போரூர் தாசில்தாரர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post திருவிடந்தை பொன்னியம்மன் கோயில் நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு ஒதுக்க தடை கோரி வழக்கு: ெசங்கை கலெக்டர் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: