கர்நாடகாவில் வெற்றிபெற்றாலும் மக்களவை தேர்தலில் கவனம் தேவை: காங். தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

பாட்னா: மக்களவை தேர்தல் செயல்திறனுக்கான முன்னோடியாக கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வெற்றியை தவறாக கருதவேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் எச்சரித்துள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தொடர்பாக பீகார் மாநிலத்தில் ஜன் சூரத் யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் சட்டமன்ற தேர்தல் வெற்றியை வைத்து மக்களவை தேர்தல் முடிவை தவறாக கருதுவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நான் எச்சரிக்கிறேன்.

கர்நாடகா தேர்தல் வெற்றியால் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. 2013ம் ஆண்டு கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பாஜவிடம் தோல்வியை தழுவியது. மூன்று முக்கிய மாநிலங்களில் ஒரு ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

The post கர்நாடகாவில் வெற்றிபெற்றாலும் மக்களவை தேர்தலில் கவனம் தேவை: காங். தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: