பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி 21 அணிகள் பங்கேற்பு

 

பெரியகுளம்: பெரியகுளத்தில் நேற்று தொடங்கிய அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் 21 அணிகள் பங்கேற்கின்றன. பெரியகுளம் தென்கரை பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினைவு அரங்கில் பி.டி.சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. வருகிற 21ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் கவுகாத்தி ஓஎன்ஜிசி அணி, புனே கஸ்டம்ஸ் அணி, கொச்சி மத்திய ஜிஎஸ்டி மற்றும் கஸ்டம்ஸ் அணி, புதுடெல்லி இந்திய விமானப்படை அணி, புதுடெல்லி இந்திய ரயில்வே அணி, லோனாவாலா இந்திய கப்பற்படை அணி, ஹைதராபாத் ஆர்டிலரி சென்டர் அணி, சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல்படை அணி, கேரளா காவல்துறை அணி, புதுடெல்லி சிஆர்பிஎப் அணி, பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி உள்ளிட்ட 21 அணிகள் பங்கேற்கின்றன.

விளையாட்டுப் போட்டிகள் நாக்அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் காலை, மாலை மற்றும் இரவு மின்னொளியில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை பெரியகுளம் நகராட்சி சேர்மன் தர் சிவகுமார் நேற்று தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்வாரிய துணை செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் போட்டியில் உடுமலைப்பேட்டை அணியை பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் அமர்நாத், துணைத்தலைவர் அபுதாகிர், செயலர் சிதம்பர சூரியவேலு மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

The post பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி 21 அணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: