ஏனாத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்

வாலாஜாபாத்: நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ், ஏனாத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நம்ம ஊரு சூப்பர் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சியில் பொது இடங்களில் குப்பைகளை சேகரித்து வைக்கும், கிராம மக்களிடையே நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட பேரணியை கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார். முன்னதாக, ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள மளிகை கடைகள், உணவகங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று துண்டு பிரசுரங்களை கொடுத்து, அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் கல்லூரி மாணவர்கள், தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கிராம சுத்தம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கிராமமக்களுக்கும், கல்லூரி மாணவ – மாணவிகளுக்கும் மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, கலெக்டர் ஆர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கிராம வீதிகளில் ஆங்காங்கே கிடந்த குப்பைகளை சேகரித்து கிராமமக்களிடையே ‘நம்ம ஊரு சூப்பர் திட்டம்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, முத்து சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் வரதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஏனாத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: