சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சித்ரா பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் இக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 3ம் தேதி முதல் இன்று வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று சித்திரை மாத பவுர்ணமி என்பதால் சென்னை, சேலம், நெல்லை, திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை ஒரு மணி முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலையில் தாணிப்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால், ஓடைகளில் அதிக நீர்வரத்து உள்ளதா என வனத்துறையினர் பார்வையிட்டனர். ஓடைகளில் நீர்வரத்து இல்லாததை தொடர்ந்து காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களிடம் வனத்துறையினர், ஓடைகளுக்கு சென்று குளிக்கக்கூடாது, தனியாக செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்து, அனுப்பினர்.

சித்திரை பவுர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன. அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இது போன்று சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் காலை 11 மணி வரை மட்டுமே கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர்.

The post சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: