கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பொன்னேரி: பொன்னேரி அருகே சோழர் காலத்தில் கட்டப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னேரி அருகே திருஆயர்பாடியில் ஆரணியாற்றின் கரையில் மிகப் பழமையான சவுந்தரவல்லி தாயார் உடனுறை கரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை சோழ மன்னர்களில் ஒருவரான கரிகாலன் கட்டியுள்ளார். இதனால் இக்கோயில் கரிகிருஷ்ண பெருமாள் கோயில் என அழைக்கப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மூலவர் கரிகிருஷ்ண பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் சாட்டையைப் பிடித்தவாறும், மற்றொரு கையை இடுப்பில் வைத்தவாறும் மாடுகளை மேய்த்த கோலத்தில் இறைவன் சாய்ந்த நிலையில் நின்றிருக்கிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை பிரமோற்சவ விழா துவக்கத்தை முன்னிட்டு, நேற்று காலை கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இக்கோயிலில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை சித்திரை பிரமோற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக, வரும் 8ம் தேதி நள்ளிரவு ஹரிஹரன் சந்திப்பும், 10ம் தேதி தேர் திருவிழா, 13ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இக்கொடியேற்ற நிகழ்ச்சியில் பொன்னேரி உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

The post கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: