சென்னை: தம் மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்.பி.யிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிகோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக சிறப்பு டிஜிபி-யாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதனடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
வழக்கு தொடர்பாக புகார் அளித்த பெண் எஸ்.பி. உள்ளிட்ட அரசு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், புகாரளித்த பெண் எஸ்.பி. உள்ளிட்ட நான்கு சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி ராஜேஷ் தாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளதால் அவற்றை உறுதி செய்வதற்காக பெண் எஸ்.பி. உள்ளிட்டோரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமென கோரியிருந்தார்.
மனு, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர் அருள் செல்வம், ஏற்கனவே போதுமான அளவு குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதிக்க கூடாது என தெரிவித்தார். மேலும், விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெண் எஸ்.பி. உள்ளிட்ட மூவரிடம் ஏற்கனவே குறுக்கு விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அதேசமயம், குறுக்கு விசாரணை செய்யப்படாத 62வது அரசு தரப்பு சாட்சியிடம் மட்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
The post பெண் எஸ்.பி.யிடம் குறுக்கு விசாரணை மீண்டும் நடத்த அனுமதிக்க முடியாது: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
