மே 5ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்: மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

மதுரை: மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜப்பெருமாள் என்று அழைக்கப்படும் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா வரும் 30ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே 4ம் தேதி மதுரை 3 மாவடி பகுதியில் கள்ளழகர் எதிர் சேவை தொடங்கி 5ம் தேதி அதிகாலை வரை தல்லாகுளம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 5ம் தேதி காலை 5:45 மணி முதல் 6:12 மணிக்குள்ளாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறுகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதையொட்டி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் விழாவை நடத்த அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கள்ளழகர் விழாவை ஒட்டி மே 5ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கள்ளழகர் திருவிழாவிற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

The post மே 5ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்: மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: