திருவண்ணாமலையில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 

சென்னை: திருவண்ணாமலை ராஜந்தாங்கலில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், இராஜந்தாங்கல் கிராமத்தில் கடந்த 24.12.2025 அன்று காலை சுமார் 11.30 மணியளவில் திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றும், பாண்டிச்சேரியிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேங்கிக்கால், பாலகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த கனகவள்ளி (வயது 38) க/பெ.சக்திவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், காயமடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தண்டரை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பவுனம்மாள் (வயது 75) க/பெ.சீனுவாசன் மற்றும் வேங்கிக்கால், தென்றல் நகரைச் சேர்ந்த கலைவாணன் (வயது 62) த/பெ.இராஜசேகரன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: