கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

சென்னை: கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு, சலுகைகளை வழங்க கோரி அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர இந்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களை பெற, அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும் அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து, அந்த பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டு வர விரும்புகிறேன்.

ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பௌத்த மத்தை தவிர்த்த பிற மதங்களை சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பை சேர்ந்தவராக கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த, அதே சமூகத்தை சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்கு தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு.

மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. இத்தகைய சாதி என்பது நீ வேறு; நான் வேறு என்பதாக இல்லாமல், நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கை கோடாக இல்லாமல், செங்குத்துக் கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதி தத்துவம். இந்த சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாக பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்.

அந்த வகையில் கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011 ஆகிய காலக்கட்டங்களில் இதே கோரிக்கையினை நிறைவேற்ற பிரதமருக்கு நேர்முக கடிதம் எழுதி, ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். இதே பேரவையில், ஒன்றிய அரசிடம் இந்த கோரிக்கை வலியுறுத்தப்படும் என்று 6-1-2011 அன்று ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தி இருந்தோம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்துவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித்தொகை திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்பவர்களுக்கான ஊக்கத்தொகை, உயர்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம். அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தை கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956ம் ஆண்டு சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்களையும், 1990ம் ஆண்டு பவுத்த மதத்தை பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராக சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

இதேபோன்ற திருத்தத்தைத்தான் கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள். ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும், மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும், மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என்றும் தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார். அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். “இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களை பெற, அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று கூறினார். சமூகநீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்ட இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக), இனிக்கோ இருதயராஜ் (திமுக), சு.ரவி (அதிமுக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைசெல்வன் (விசிக), சின்னதுரை (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன்திருமலைகுமார் (மதிமுக), ஜவஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் பேசினர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

முன்னதாக பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் தீர்மானத்துக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்தார். அவர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் பாஜ உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன் தீர்மானத்தை கண்டித்து பேசிவிட்டு வெளிநடப்பு செய்துள்ளார். இந்த தனி தீர்மானம் ஏனோ தானோ என்று கொண்டு வரப்படவில்லை. சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்தபிறகுதான் கொண்டு வரப்பட்டுள்ளது. முறையாக கொண்டு வந்து பேரவையில் முன்மொழிந்ததால் வெளிநடப்பு செய்துள்ளனர்’’ என்றார்.

  • ‘சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை சாதியின் பெயரால் கொடுப்பதே சரி’

    முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; சாதிய இழிவுகள் ஒழிவதில்லை. கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலின மக்களுக்கான உரிமைகள் அளித்திட அரசியலமைப்பு திருத்தம் வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை சாதியின் பெயரால் கொடுப்பதே சரி என கூறியுள்ளார்.

The post கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது appeared first on Dinakaran.

Related Stories: