செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் சிறை காவலர்களை தாக்கிய வெளிநாட்டு பெண் கைதிகள்: போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

பூந்தமல்லி, ஏப். 17: புழல் மத்திய சிறை மகளிர் பிரிவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு பெண்கள் உள்பட சுமார் 150க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், தண்டனை பிரிவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்கள், சில மாதங்களாக போதை பொருட்கள், செல்போன்களை பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனால், புழல் சிறைக்குள் அடிக்கடி சோதனை நடத்தி, செல்போன் மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, மகளிர் சிறை பிரிவில் பெண் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, ஒரு அறைக்குள் உகாண்டா நாட்டை சேர்ந்த சான்ட்ரா நான்டேசா, மாலத்தீவை சேர்ந்த சம்சியா ஆகிய இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். பெண் சிறை காவலர்கள், அந்த பெண்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்ய முயற்சித்தனர். உடனே, 2 பெண் கைதிகளும், செல்போனை கீழே போட்டு உடைத்தனர். மேலும், அவர்களை விசாரணைக்கு அழைத்ததால் ஆத்தரமடைந்து, 2 பெண் காவலர்களையும் கீழே தள்ளி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, சக சிறை காவலர்கள் ஓடிவந்து, 2 பெண் காவலர்களையும் மீட்டனர். மேலும், பெண் கைதிகள் உடைத்த ஆன்ட்ராய்டு செல்போன், சிம்கார்டு, பேட்டரி, சார்ஜர், ஹெட்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் சிறை காவலர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் சிறை காவலர்களை தாக்கிய வெளிநாட்டு பெண் கைதிகள்: போலீசார் வழக்கு பதிந்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: