திருக்கழுக்குன்றம், மார்ச். 22: கல்பாக்கம் அடுத்த புது நடுக்குப்பம் மீனவர் பகுதியில் 2004ம் ஆண்டு சுனாமிக்கு பிறகு வீடுகளின்றி மீனவர்கள் தவித்தனர். இந்நிலையில் அதே கடலோரப்பகுதியில் சென்னையை சேர்ந்த ஒரு தனிநபருக்கு சொந்தமான இடத்தில் 57 சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுனாமிவீடுகள் கட்ட இடம் கொடுத்தவர் ‘தனக்கு கடற்கரை பகுதிக்கு செல்ல வழி வேண்டும். எனவே வழிக்கு தடையாக உள்ள இளமதி என்பவரின் வீட்டை இடித்து வழி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு இளமதி மறுப்பு தெரிவித்தார். இளமதி மற்றும் அவரது சகோதரர்கள் ஆரணி, வேலாயுதம் ஆகிய 3 குடும்பத்தினர் அந்த சென்னையை சேர்ந்த சுனாமி வீடு கட்டிக் கொள்ள இடம் கொடுத்தவரிடம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த சென்னையை சேர்ந்த அந்த நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.