வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா துளசியாப்பட்டினத்தில் ரூ.18.5 கோடியில் ஔவைக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தூளாசியாபட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள ஔவையார் கோயிலில் தமிழக அரசின் சார்பில் 49வது அவ்வை பெருவிழா துவங்கியது. நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேசியதாவது: துளசியாப்பட்டினத்தில் ஒளவைக்கு விழா எடுப்பது பெருமைக்குரியது. இந்த விழா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக நடத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். இந்த விழா நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும். எதிர்காலத்தில் தமிழகத்தில் தமிழுக்கு நடைபெறும் விழாவாக இந்த அவ்வை பெருவிழா அமையும். ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றி கொள்வோம் ஒளவைக்கு துளசியாபட்டினத்தில் ரூ.18.5 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.