மதுரை: மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பாரா தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 1,200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் மூலம் மாநில தடகள போட்டியில் தேர்வு பெற்ற பாரா தடகள வீரர்கள், வீராங்கனைகள் சுமார் 80 பேர் பங்கேற்றனர். உடல் பாதிப்பின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 100 மீ., 200மீ., 400 மீ., 800மீ., 1500மீ., 5000 மீ., மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் தமிழக வீரர்கள் மொத்தம் 11 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர். இதன்மூலம் மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த அளவிலே ஐந்தாம் இடம் பிடித்து சிறப்பு செய்தனர். இதில் கோயம்புத்தூரை சேர்ந்த முத்துராஜ், மதுரையை சேர்ந்த மனோஜ் ஆகியோர் குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளனர்.