ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்தவர் கைது

பல்லாவரம், மார்ச் 19:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், ரயில்வேயில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு வேலையில் சேர்த்து விடுகிறேன் என்று கூறி, சென்னையை சேர்ந்த 7 பேரை தனித்தனியாக பல்லாவரம் வரவழைத்து, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.27 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி, வேலை வாங்கி தரவில்லை.

பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் ஜெயக்குமாரை கைது செய்து நடத்திய விசாரணையில், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார், ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: