கீழ்வேளூர், மார்ச் 18: எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு பல்வேறு காரணங்களால் 40 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தெப்பத்திருவிழா நடத்த கோயில் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 25 அடி நீளம், 25 அடி அகலத்துடன் பிரமாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு தெப்பம் கட்டமைக்கப்பட்டது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.